லட்சத்தீவில் புதிய விமான நிலையம் அமைக்க இந்தியா திட்டம்!

லட்சத்தீவின் தென்கோடியில் உள்ள மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை உருவாக்க இந்தியா (மத்திய அரசு) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் லட்சத்தீவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, கவரட்டியில் சுமார் ரூ.1150 கோடி மதிப்பிலான  வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். இதுபோன்று நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதன்படி, தொழில்நுட்பம், எரிசக்தி, நீர்வளம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதன்பின் பிரதமர் கூறியதாவது, லட்சத்தீவின் நிலப்பரப்பளவு சிறியதாக இருந்தாலும், மக்களின் இதயங்கள் கடலைப் போல ஆழமாக உள்ளன. கரையோர தீவுப் பகுதிகள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்படுகிறது. எங்கள் அரசு அவற்றுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.

யூனியன் பிரதேசத்தை சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என பல்வேறு திட்டங்கள் குறித்தும், லட்சத்தீவு குறித்தும் பிரதமர் மோடி பேசினார். இதனிடையே, லட்சத் தீவு பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை பிரதமர் மோடி இணையத்தில் பகிர்ந்து, சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம் என கூறியிருந்தார்.

ட்விட்டரில் வைரலாகும் #BoycottMaldives ஹேஷ்டேக்..!

இந்த பதிவிற்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தனர். இதற்கு இந்தியர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து, பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர்.  அதேபோல மாலத்தீவுக்கு செல்ல புக் செய்யப்பட்ட  விமான டிக்கெட்களும் ரத்து செய்தனர். அதுமட்டுமில்லாம,  BoycottMaldives என்ற ஹேஸ்டேக்  இணையத்தில் டிரெண்டானது. இந்த நிலையில், லட்சத்தீவின் தென்கோடியில் உள்ள மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் விமானங்கள், ராணுவப் போக்குவரத்து விமானங்கள் மற்றும் வணிக விமானங்களை இயக்கும் திறன் கொண்ட கூட்டு விமான நிலையத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும், கடந்த காலங்களில் மினிகாய் தீவுகளில் இந்த புதிய விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள் அரசாங்கத்திடம் அனுப்பப்பட்ட போதிலும், கூட்டுப் பயன்பாட்டு பாதுகாப்பு விமான நிலையத்தை உருவாக்கும் திட்டம் சமீப காலமாக புத்துயிர் பெற்று, தீவிரமடைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்