IND vs NZ: அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பழையப் பகையைத் தீர்க்குமா இந்தியா.?

IND vs NZ: நடப்பு ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டியானது அரைஇறுதியை எட்டியுள்ளது. இந்தியாவில் டெல்லி, சென்னை, புனே, அகமதாபாத் என பல இடங்களில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தமாக 45 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 2 அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 அணிகளை தவிர மற்ற 6 அணிகளும் தொடரை விட்டு வெளியேறுள்ளது. தற்போது புள்ளிவிவரப்பட்டியலில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அபாரமாக விளையாடி, ஒரு போட்டியில் கூடத் தோல்வியை சந்திக்காமல் 18 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதற்கு அடுத்ததாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முறையே 14 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. நியூசிலாந்து அணியானது 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் முதல் அரையிறுதி போட்டியானது நாளை (15.11.2023) மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், லீக் போட்டியில் தோல்வியை சந்திக்காத இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் நேருக்கு நேர் மோதுகிறது. கடந்த 2019 உலகக்கோப்பையில் இருந்தே இந்த இரு அணிகளுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. ஏனென்றால் அந்த தொடரிலும் இதே போல நடந்த முதல் அரையிறுதி நாக்அவுட் சுற்றில் இந்தியாவும், நியூசிலாந்தும் விளையாடியது.

அதில் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே போல இந்த போட்டியிலும் வெற்றி பெறலாம் என்ற முனைப்பில் நாளை விளையாடவுள்ளது. ஆனால் கடந்த உலகக்கோப்பையைக் காட்டிலும் இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக கேப்டன் ரோஹித், விராட் கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இவர்களின் அற்புதமான ஆட்டத்தாலும், ஒற்றுமையினாலும் இந்தியா ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. இதனால் இந்தியாவை எதிர்கொள்வது நியூசிலாந்துக்கு இந்த முறை கடினமாக இருக்கும். இந்த இரு அணிகளும் இதுவரை 117 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 59 முறை இந்தியாவும், 50 முறை நியூஸிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகள் முடிவுகள் இல்லாமல் முடிந்துள்ளன.

அதேபோல ஒருநாள் உலகக்கோப்பையில் 10 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. அதில் வியக்கத்தக்க வகையில் 5 முறை நியூசிலாந்து அணி வென்றுள்ளது. இந்தியா 4 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் உள்ளது. நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நியூசிலாந்தின் இந்த சாதனையை சமன் செய்யும். மேலும் இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதால் இந்தியா அணிக்கு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.