இந்தியா புறக்கணித்தால் பாகிஸ்தானும் புறக்கணிக்கும் – ரமிஸ் ராஜா.!

பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பையை இந்தியா புறக்கணித்தால் 2023 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்குபெறாது.

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பையில், இந்தியா கலந்துகொள்ள வில்லையெனில், பாகிஸ்தானும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் ரமிஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

ரமிஸ் ராஜா, இந்தியா இங்கு வந்தால், பாகிஸ்தான் இந்தியாவிற்கு செல்லும் இல்லையெனில் அவர்கள் பாகிஸ்தான் இல்லாமல் உலகக்கோப்பை தொடரை நடத்தட்டும், பாகிஸ்தான் இல்லாத தொடரை யார் பார்ப்பார்கள்? பாகிஸ்தான் அணி விளையாட்டில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது.

நாங்கள் இந்திய அணியை 2021ஆம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2022 ஆசியக்கோப்பையில் தோற்கடித்துள்ளோம், மேலும் டி-20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளோம் என்று ரமிஸ் ராஜா கூறியுள்ளார்.

ஆசியக்கோப்பை தொடரை, இந்தியா, பாகிஸ்தானுக்கு பொதுவான இடங்களில் நடத்துவது தொடர்பாக ஜெய் ஷாவின் கருத்துக்கு பதிலளித்து இந்தியாவிற்கு பாகிஸ்தான் வராது என்று பாக். தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், இந்தியா எந்தவித அச்சுறுத்தலுக்கும் பயப்படாது.

நாங்கள், அடுத்த வருடம் அனைத்து அணிகளுடனும் 50 ஓவர் உலகக்கோப்பையை நடத்துவோம். இதற்கு முன்னதாகவும் இந்தியா உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்தியுள்ளது, அனைத்து அணிகளும் மகிழ்ச்சியாக பங்கேற்றன என்று கூறினார்.

பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி கூறும்போது, பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக்கோப்பையில் இந்தியா பங்கேற்பது எங்கள் கையில் இல்லை. இந்திய அரசு தான் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்திய அணி, இங்கிருந்து புறப்படுவதற்கும், மற்ற நாடுகள் இந்தியா வருவதும் அரசின் முடிவில் தான் உள்ளது.

இந்தியா இதற்கு முன் 1987 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் இணைந்தும், 1996 இல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் இணைந்தும், 2011இல் இலங்கை மற்றும் வங்கதேசத்துடன் இணைந்தும் உலகக்கோப்பை தொடரை நடத்தி இருக்கிறது.

author avatar
Muthu Kumar

Leave a Comment