பெற்றோரைப் பிரிந்தேன்..என்னால் தூங்க முடியாது..! உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் ஷர்மா பேட்டி!

ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பைத் தொடர் ஆனது நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியானது இந்தியாவில் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஐந்து முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக, அக்டோபர் 8ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் பலப்பரீட்சை செய்யவுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரோகித் சர்மா தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் முறை வாழ்க்கை முழுவதிலும் தான் சந்தித்த கஷ்டங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக தான் குடும்பம் அனுபவித்த கஷ்டங்களை பற்றி மனம் திறந்து பேசினார்.

என்னால் தூங்க முடியாது

அப்பொழுது சிரித்துக்கொண்டே பேசிய ரோஹித் சர்மா திடீரென்று முகத்தை சற்று சோகமாக மாற்றினார். அவர் பேசியதாவது, “எனது குடும்பத்தில் குறைந்தது 10 முதல் 11 பேர் ஒரே அறையில் தூங்குவது வழக்கம். அதில் தாத்தா படுக்கையில் தூங்குவார். நான், மாமா, அத்தை, பாட்டி தரையில் தூங்குவோம். அப்பொழுது படுக்க இடமில்லாமல் நான் சுருண்டு படுப்பேன். ஆனால், எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. நான் யாரையாவது அல்லது எதையாவது என் காலால் தொட வேண்டும். அதனால் நான் சுவரை நோக்கி படுத்திருப்பேன். அப்போது எனது கால்கள் சுவர் மீது பட்டப்படி இருக்கும். இவ்வாறு என் கால் எதன் மீதாவது படவில்லை என்றால் என்னால் தூங்க முடியாது.” என்று கூறினார்.

நிதிநெருக்கடியால் பெற்றோரைப் பிரிந்தேன்

தொடர்ந்து குடும்பத்தின் நிதி நெருக்கடியால் தனது பெற்றோரை பிரிந்தது குறித்து வருத்தம் தெரிவித்தார். இது குறித்து கூறிய ரோஹித், “என் தாத்தா ஒருவரை மட்டும் கவனித்துக் கொள்வது என் பெற்றோருக்கு நிதி ரீதியாக கொஞ்சம் எளிதாக இருக்கும் என்று உணர்ந்து என் தம்பியை மட்டும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள் ரோஹித்தை எங்களுடன் விட்டுச் செல்லுங்கள் என்று என் பெற்றோரிடம் கேட்டார். இதனால் என் பெற்றோரும் என் சகோதரரும் என்னைத் தாத்தாவிடம் விட்டுவிட்டு போரிவிலியில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள டோம்பிவிலியில் தங்கினார்கள். நான் போரிவிலியில் எனது தாத்தாவுடன் இருந்தேன். அங்கே சுமார் 100 சதுர அடி வீட்டில், நாங்கள் எட்டு பேர் தங்கி இருந்தோம்.” என ரோஹித் சர்மா கூறினார்.

வீரர்களை நீக்குவது கடினமான முடிவு

இதன்பிறகு ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சில வீரர்களைத் தேர்ந்தெடுக்காதது குறித்து பேசிய ரோஹித், “உலகக் கோப்பை அணியிலிருந்து சில வீரர்களை நீக்குவது கடினமான முடிவு. அது எளிதல்ல. உங்கள் சிந்தனையானது தெளிவாக வைத்துக்கொண்டு, நீங்கள் அணிக்காக அதை செய்து தான் ஆக வேண்டும். அணியில் தேர்வு செய்யப்படாதவர்களை நான் தொடர்பு கொள்கிறேன். அவர்களது சிந்தனை என்ன என்பதை அறிந்திருப்பது மிகவும் முக்கியம். அவர்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். நானும் அதை கடந்து வந்திருக்கிறேன். இருந்தாலும் எங்கள் அணியில் சிறப்பான ஆட்டத்தை பெற வேண்டும். அதனால் எந்த வீரர் வேண்டும் என்பதை நான் மட்டுமே தீர்மானிக்கவில்லை. இது ஒரு கூட்டு முடிவு.” என்று கூறினார்

எதற்கும் மற்றவர்களைத் தேடிச் செல்லாதீர்கள்

“நாட்கள் செல்ல செல்ல நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நானே உணர்ந்தேன். நான் எதை உருவாக்கி இருந்தாலும் அதற்கு நானே தான் காரணம். இதில் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரின் ஆதரவும் உள்ளது. நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு நான் எந்த சூழ்நிலையிலும் யாரையாவது எதிர்பார்த்தால், முதலில் என்னிடம் நானே கேட்டுக்கொள்வேன். என்னிடமிருந்து ஏதாவது உதவி தேவையா.? என்று கேட்டு, அப்படி தேவை என்றால் அதை நானே செய்து கொள்வேன், மற்றவரிடம் கேட்க மாட்டேன், அதுபோல எந்த பிரச்சினையிலிருந்தும் ஒரு வழியை நீங்களாகவே கண்டுபிடிங்கள், உங்களுக்கு உதவ மற்றவர்களைத் தேடிச் செல்லாதீர்கள். என்று கூறினார்.

மொபைலில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இல்லை

மேலும், “தற்போது நாம் வாழும் காலத்தில் புதிய தலைமுறையினர் இன்ஸ்டாகிராம், ரீல், போன்ற வெவ்வேறு சமூக ஊடகங்களில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அவர்களை மாற்ற முடியாது. அதனை விரும்பி பயன்படுத்துகிறார்கள். ஆனால், இன்றைய சமூக ஊடகங்கள் போலியானவை. நீங்கள் எனது தொலைபேசியை பாருங்கள், கடந்த 9 மாதங்களாக எனது மொபைலில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இல்லை. நான் ஏதேனும் பதிவிட வேண்டும் என்றால், அதை எனது மனைவி செய்வார். நாள் முழுவதும் மொபைலைப் பார்த்துக் கொண்டிருப்பது நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும். அதனால் எனக்கு எதுவும் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.” என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.