என் வாழ்க்கையில் சதத்திற்க்காக விளையாடவில்லை, 485 நாட்களில் ஒரு சதம் கூட அடிக்காத கோலி..!

நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் சதங்கள் அடிப்பதற்காக விளையாடியதில்லை என கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் , 5 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதுவரை நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கிலும், டி20 தொடரில் 3-2  என்ற கணக்கிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புனேவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்திலும், நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று இரு அணிகளும் சமமாக உள்ளது.

இந்நிலையில், இந்திய அணி கேப்டன் கோலி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என கடைசியாக விளையாடிய 43 இன்னிங்ஸில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக கோலி கடந்த 2019 நவம்பர் மாதம் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 136 ரன்கள் எடுத்தார். அதன் பின் ஒரு வருடத்துக்கு மேலாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

இதுகுறித்து பேசிய விராட் கோலி, நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் சதங்கள் அடிப்பதற்காக விளையாடியதில்லை, அதனால்தான் நான் குறுகிய காலத்தில் பல சாதனைகளை பெற்றேன். அணி வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது. நான் சதம் அடித்ததும்  அணி வெற்றி பெறவில்லை என்றால் அந்தச் சதத்தால் எந்தப் பயனும் இல்லை என கூறினார்.

விராட் கோலி டெஸ்ட் போட்டியில் 27, ஒருநாள் போட்டியில் 43 , ஐபிஎல்லில் 5 சதங்களும் அடித்துள்ளார். கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

author avatar
murugan