என் அம்மாவை நேரில் பார்த்து 2 மாசம் ஆச்சு.. அண்ணாமலை வருத்தம்.! 

Annamalai : அரசியலில் விடுமுறை எடுக்காமல் இருக்கிறேன். என் அம்மாவை பார்த்து 2 மாசம் ஆயிடிச்சு -அண்ணாமலை.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக தொண்டர்கள் கலந்து கொண்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், அரசியல் கட்சியுடன் சண்டை போடுவதற்காக நான் போட்டியிடவில்லை. ஒரு மாற்றம் வர வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன். இப்போது மாற்றமில்லை என்றால் எப்போதும் மாற்றம் இல்லை என்பதில் நான் தற்போது உறுதியாக இருக்கிறேன்.

மூத்த தலைவர்கள் அனைவரையும் தமிழக தேர்தல் களத்திற்கு கொண்டு வந்துள்ளோம். எம்பி பதவி என்பது முள் மெத்தை போன்றது. குதிரையிடம் உணவளித்து வேலை வாங்குவது போல பிரதமர் மோடி எம்பிக்களிடம் வேலை வாங்குவார். அவரிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. இந்த முறை நாம் மாற்றத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

நான் அரசியலில் விடுமுறை எடுத்ததே கிடையாது. என் அம்மாவை பார்த்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. என் மண் என் மக்கள் யாத்திரை ஆரம்பித்ததில் இருந்து கடந்த 8 மாதங்களாக நான் விடுமுறை எடுக்காமல் உழைத்து வருகிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.