இந்துத்துவா.. இந்தி திணிப்பு.. வெறுப்பு அரசியல்.! இவை பசிக்கான தீர்வல்ல.! – ப.சிதம்பரம் கடும் விமர்சனம்.!

உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை கீழே உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்.

உலக பட்டினி குறியீடு (Global Hunger Index) தொடர்பான 121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 107வது இடத்தில் உள்ளது. உலக பட்டினிக் குறியீடு பட்டியலை ஆண்டு தோறும் அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் வெளியிட்டு வருகின்றன. சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் வளர்ச்சி, ஆகியவற்றை தேசிய, மாநில,மண்டல அளவில் ஆய்வு செய்து ஆண்டு தோறும் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தற்போது 2022-ஆம் ஆண்டிற்கான சர்வதேச பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டது. இதில், இந்தியா 107வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த ஆண்டு 106 நாடுகளில் 101வது இடத்திலும், 2020ம் ஆண்டில் 94வது இடத்தில் இருந்தது இந்தியா. தெற்காசிய நாடுகளில் ஆப்கானிஸ்தானை (109) தவிர்த்து, அனைத்து நாடுகளையும் விட இந்தியா இந்த பட்டியலில் பின் தங்கியுள்ளது. அதன்படி, இலங்கை 60, வங்கதேசம் 84, நேபாளம் 81 மற்றும் பாகிஸ்தான் 99வது இடத்திலும் உள்ளது. உலக பசி குறியீட்டில் இந்தியா 107வது இடத்திற்கு தள்ளப்பட்டதால் அரசியல் தலைவர்கள் பலர் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் எப்போது குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு, பசி மற்றும் வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் வீண்விரயம் போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்?, இந்தியாவில் 22.4 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள். உலக பசி குறியீட்டில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது. மோடி அரசின் 8 ஆண்டுகளில் 2014ல் இருந்து எங்களின் மதிப்பெண் மிகவும் மோசமாகிவிட்டது.

மொத்த இந்தியர்களில் 16.3 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், அதாவது அவர்களுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை. 19.3 சதவீத குழந்தைகள் வாழ்வு வீணடிக்கப்படுகிறது, 35.5 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். இந்துத்துவா, இந்தி திணிப்பு, வெறுப்பு அரசியல் பரப்புவது உள்ளிட்டவை பசிக்கான தீர்வு அல்ல என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment