குட்நியூஸ்…இவர்களுக்கு இனி ரூ.3000 ஊக்கத்தொகை – நாளை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ரூ.3000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து துறை ரீதியாக பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்து வருகிறார்.அந்த வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம்  செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம்,மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சி பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி,ஓதுவார் பயிற்சி பள்ளியில் 3 ஆண்டு கால படிப்பு முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது.ஆனால்,கடந்த 3 ஆண்டு காலமாக ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் இருந்த நிலையில்,திமுக ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து பயிற்சி பள்ளியில் மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக,பயிற்சி பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு,அவை பரிசீலிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில்,அவை ரூ.3000 உயர்த்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,ஓதுவார் பயிற்சி பள்ளியில் பயில தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ரூ.3000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னையில் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.