11-வது ஐபிஎல் சீசன் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரு நகரில் நடந்தது. ஐபிஎல் தொடரில் ஒரு காலத்தில் மேட்ச் வின்னராக ஜொலித்த மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில், இந்திய வீரர் யுவராஜ் சிங்கை வாங்குவதற்கு ஒரு அணியும் முன்வரவில்லை.
இருவருக்கும் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டு இருந்தும் யாரும் வாங்காத நிலையில், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி இருவரையும் தலா ரூ.2 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இனிவரும் காலங்களில் இவர்கள் இருவரும் மேட்ஜ் வின்னர்களாக வலம் வருவார்களா என்பது மிகப்பெரிய சந்தேகத்தை மற்ற அணிகளுக்கு ஏற்பட்ட காரணத்தினாலோ இருவரையும் வாங்க முன்வரவில்லை.
இந்நிலையில், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் ஜெர்சி அறிமுக விழா டெல்லியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியின் இடையே கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகர் வீரேந்திர சேவாக் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கிறிஸ் கெயிலும், யுவராஜ் சிங்கும் அவர்களின் அடிப்படை விலைக்கே ஏலத்தில் எடுக்கப்பட்டது சிறப்பாகும். இவர்கள் இருவரும் பேரம்பேசித்தான் எடுக்கப்பட்டு இருப்பார்கள். ஒருவேளை இருவரையும் மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்க முற்பட்டு இருந்தால், அதிகவிலை இருவருக்கும் தரப்பட்டு இருந்திருக்கும்.
இருவரும் மிகப்பெரிய வீரர்கள், சிறந்த மேட்ச்வின்னர்கள். கிங்ஸ்லெவன் அணிக்காக இருவரும் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுக்கொடுத்தால் கூட இவர்கள் மீது போடப்பட்ட முதலீட்டை திருப்பி எடுத்துவிடலாம்.
கிங்க்ஸ் லெவன் அணியில் தொடக்க ஆட்டக்காரராக யுவராஜ் சில போட்டிகளுக்கு களமிறங்கலாம். இவருடன் சேர்ந்து ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரராக களமிறங்க சிறந்த வீரர். ஆனால், ஆஸ்திரேலியாவில் திருமணத்துக்காக செல்வதால், சில போட்டிகளுக்கு அவர் விளையாட மாட்டார். ஆதலால், கெயில் சில போட்டிகளுக்கு யுவராஜுடன் இணைந்து களமிறங்குவார்.
அணியில் இப்போது இடம்பெற்றுஇருக்கும் சில வீரர்களுக்காக நாங்கள் அதிகமான பணத்தை செலவு செய்து இருக்கிறோம். அவர்கள் தங்கள் பணியை நிறைவாகச் செய்வார்கள் என்று நம்புகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இப்போது இருக்கும் கிங்ஸ்லெவன் அணி சிறந்த அணி என நான் கருதுகிறேன்.
கடந்த சீசன்களில் தரமான வீரர்களுக்கு நிறைய தட்டுப்பாடு இருந்தது. ஆனால், இந்த முறை கேப்டனான ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், கருண் நாயர், கே.எல். ராகுல், பிரேந்திர சிங், மோகித்சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நடுவரிசை பேட்டிங்கை வலுப்படுத்த மனோஜ் திவாரி, டேவிட் மில்லர் ஆகியோர் இருக்கிறார்கள்.
இந்த முறை எங்களிடம் அனுபவம் வாய்ந்தபந்துவீச்சாளர்கள் அதிகம் இல்லாவிட்டாலும், தரமான பந்துவீச்சாளர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர். ஆன்ட்ரூ டை, அஸ்வின், சரண், சர்மா, அங்கித் ராஜ்பூத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பந்துவீச்சாளர் கேப்டனாக வரும்போது, களத்தில் மற்ற பந்துவச்சாளர்களுக்கு அதிகம் உதவுவார். கபில்தேவ், இம்ரான்கான், வாசிம் அக்ரம் ஆகியோர்அதனால்தான் சிறப்பான கேப்டனாக ஜொலிக்க முடிந்தது.
இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.