“பொங்கல் பண்டிகைக்கு பிறகு முழு ஊரடங்கா?” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த தகவல்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ஏற்கனவே பிறப்பித்த தமிழக அரசு,அதனை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.எனினும்,கொரோனா அதிகரிப்பின் காரணமாக பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ? என்று மக்கள் நினைக்கின்றனர்.

இந்நிலையில்,பொங்கல் பண்டிகைக்கு பிறகு மாநிலத்தில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்றும்,தமிழகத்தில் ஒமைக்ரான் பரிசோதனை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கூறியதாவது:

“தமிழகத்தில் ஒமைக்ரான் மரபணு பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில்,100 பேருக்கு கொரோனா இருந்தால் அதில் 85 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்புதான் உள்ளது.ஒமைக்ரான் பரிசோதனை முடிவு வருவதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து விடுகின்றனர்.எனவே, ஒமைக்ரான் மரபணு பரிசோதனை நிறுத்தப்பட்டு விட்டது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை.மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது.

கொரோனா 3-வது அலையை பொறுத்தவரை தீவிர சிகிக்சை என்பது குறைவாகவே உள்ளது.மிதமான பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம்.கொரோனா பாதித்து வீடுகளில் தனிமையில் உள்ளவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும்,அவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் வழங்கப்பட்டுள்ளது.கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது.மாறாக,அடுத்த வாரம் சனிக்கிழமை வழக்கம் போல் தடுப்பூசி முகாம் நடைபெறும்”,என்று தெரிவித்துள்ளார்.