“முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது”-நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ..

அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 9 ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து,வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டில்தான் சொத்துக்கள் அதிமகாக உள்ளது,அதனால்தான் தமிழகத்திற்கு கடன் நெருக்கடி அதிகமாகவுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்ததாக கூறி,அதற்கு பதில் அளித்த மாஃபா பாண்டியராஜன் அவர்கள்,”கடன் வாங்கி சொத்துக்கள் சேர்த்தோம்,ஆனால்,குறைந்த வட்டியிலேயே அதிமுக ஆட்சியில் கடன் வாங்கப்பட்டது.சொத்துக்கள் அதிகமாக உள்ளதால்தான்,கடன் அதிகமாக தருகிறார்கள்.எனவே,கடன் வாங்குவது தவறில்லை,ஆனால்,என்ன வட்டி விகிதத்தில் வாங்குகினோம் என்பதை வெள்ளை அறிக்கையில் கொடுக்கவில்லை”,என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ,இதற்கு பதில் அளிக்கும் வகையில் மதுரையில் செய்தியாளர்களிடம்  பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லாமல் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சிப்பதாக கூறினார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:”மாஃபா பாண்டியராஜன் அவர்களுக்கு பொருளாதாரம் தெரியாது,அவரது உளறலுக்கு எல்லாம் நான் பதில் கூற முடியாது.தவறான சூழ்நிலையை திருத்துவதற்கு நான்கு படிகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.

  1. முதலில் அனைத்து தகவல்களையும் திரட்டி,நீங்களே நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
  2. மக்களிடம் சென்று அதை எடுத்துக்கூறுங்கள்,அப்போதுதான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற அர்த்தம் புரியும்.
  3. மக்களிடம் கேட்ட கருத்துக்களை கொண்டு,அதை எப்படி திருத்தலாம் என்று நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள்.
  4. அதன்பின்னர்,திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று முதல்வர் கூறியதாகவும்,அதுதான் ஜனநாயகத்தின் மரபு,வெளிப்படைத்தன்மை என்று தெரிவித்தார்.

மேலும்,முன்னதாக அதிமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதா?,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வெளியிட்ட தொலைநோக்கு பார்வை திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டதா? என்ற கேள்வியையும் எழுப்பினார்.