FIFA WorldCup2022: நெதர்லாந்தை வீழ்த்தி மெஸ்ஸியின் அர்ஜென்டினா அரையிறுதிக்கு தகுதி.!

ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்தை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

கத்தாரில் நடந்து வரும் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது கால் இறுதி ஆட்டத்தில் இன்று அதிகாலை 12 30 க்கு லுசைல் ஸ்டேடியத்தில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் 35 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் மொலினா ஒரு கோல் அடித்தார்.

முதல் பாதியின் முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 73 ஆவது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி, ஒரு கோல் அடித்து ரசிகர்களை உற்சாகமடைய செய்தார். இதனால் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

பிறகு ஆட்டத்தின் 83 வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் வெகோரஸ்ட் ஒரு கோல் அடித்தார். 90 நிமிடம் முடிந்து கூடுதலாக வழங்கப்பட்ட 11 வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் வெகோரஸ்ட் மேலும் ஒரு கோல் அடித்து சமநிலை பெறச் செய்தார்.

இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததால் பெனால்டி முறை பின்பற்றப்பட்டது. பெனால்டி முறையில் அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி, லியாண்டர் பாரடேஸ், மாண்டியல் மற்றும் மார்டினஸ் ஆகியோர் ஒவ்வொரு கோல் அடிக்க, நெதர்லாந்து அணியில் கூப் மினர்ஸ், வெகோர்ஸ்ட், மற்றும் டீ ஜங் ஆகிய மூவரும் மட்டுமே கோல் அடிக்க அர்ஜென்டினா அணி 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

மேலும் லியோனல் மெஸ்ஸி இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் அர்ஜென்டினா அணிக்காக உலக கோப்பையில் 10 கோல்கள் அடித்து அர்ஜென்டினா அணியின் கேப்ரியல் பட்டிஸ்டுடா வின் சாதனையை சமன் செய்தார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment