இன்று முதல் அம்மா உணவகங்களில் கட்டணம்!

இன்று முதல் அம்மா உணவகங்களில் கட்டணம். கால நீட்டிப்பு கேட்டு பொதுமக்கள் வேண்டுகோள்.

கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அனைத்து உணவகங்கள் மற்றும் மக்கள் கூடும் வணிக  வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த மாதம் ஏப்ரல்-14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதன்பின் மே-3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டது. இந்த சமயத்தில் தமிழகம் முழுவதும், ஏழை, எளிய மக்கள் வயிறார உண்பதற்காக, அம்மா உணவகம் மூலம் அரசியல் பிரமுகர்களும், தன்னார்வலர்களும் இலவசமாக உணவளித்து வந்தனர். 

இதையடுத்து, 3 வேளையும் அம்மா உணவகங்களில் இலவச சாப்பாடு வழங்கப்படும் என்றும், அதற்குறிய தொகையை சம்பந்தப்பட்ட தன்னார்வலர்களிடம் இருந்து வசூலித்து வங்கியில் செலுத்த வேண்டும் என்றும் அம்மா உணவக ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், விதிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததையடுத்து, அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கும் முறை கைவிடப்படுகிறது. எனவே, இன்று முதல் அம்மா உணவகங்களில் பொதுமக்கள் கட்டணம் செலுத்தி தான் சாப்பிட முடியும். இதுகுறித்து அந்தந்த மண்டல பொறுப்பாளர்கள், அம்மா உணவக ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலைமை சீரடையும் வரையிலோ அல்லது ஒரு மாதத்துக்காவது இலவசமாக உணவு வழங்கினால் நன்றாக இருக்கும் என்றும், இதன்மூலம் ஏழை, எளிய மக்கள் யாரிடமும் கையேந்தாமல் அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிட்டு செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.