“ஒரு ஓட்டு கூட சிந்தாமல் சிதறாமல் முரசு சின்னத்திற்கு கிடைக்க வேண்டும்”- தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்..!

தேமுதிகவைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் இரவு பகல் பாராமல் உழைத்து, மாபெரும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டத்தில் வரும் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இதனால்,கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில்,கிராமங்களில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல் நாட்டுக்கும், தேமுதிக கட்சிக்கும் மிக மிக முக்கியமான ஒரு தேர்தல் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது:

நாட்டிற்கு வேர் இதுதான்:

“ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தேமுதிக நிர்வாகிகள் இரவு பகல் பாராமல் களப்பணியாற்றி தேமுதிகவின் வெற்றியை நிலை நாட்ட வேண்டும்.
நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் என்பதற்கேற்ப, கிராமங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளால் மிக சிறந்த ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியும்.

கட்சிக்கு வலு சேர்க்கும்:

மரத்திற்கு வேர்கள் முக்கியம் என்பது போல, நாட்டிற்கும், கழகத்திற்கும் உள்ளாட்சி அமைப்புகள் தான் வேர்களாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளை நிலைப்படுத்திக் கொண்டால், மிகவும் வலிமை பெற்ற அமைப்பாக மாறும். எனவே தேமுதிக சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், இந்த உள்ளாட்சித் தேர்தலில் நமது கழகத்தின் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அரும்பாடுபட்டு வெற்றிக்கனியை பறிக்க வேண்டும்.இது நமது கட்சியின் மிகப்பெரிய ஒரு பலமாகவும் வலு சேர்க்கும் வகையிலும் அமையும்.

முக்கியமான தேர்தல்;ஒரு ஓட்டு கூட சிந்தாமல் வேண்டும்:

தேமுதிக வேட்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், என அனைவரும், ஒரு ஓட்டு கூட சிந்தாமல் சிதறாமல் முரசு சின்னத்திற்கு கிடைக்கும்படி, வீடுவீடாக சென்று வாக்குறுதிகளை எடுத்து கூறி, தேமுதிகவிற்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்ள வேண்டும்.உள்ளாட்சி அமைப்பின் வெற்றி என்பது ஒரு மிகப்பெரிய ஒரு ஆலம் விழுதுகளுக்கு சமமான ஒரு வெற்றி. கிராமங்கள் எப்போது முன்னேறுகிறதோ, அப்போதுதான் ஒரு நாடு முன்னேற்றம் காணமுடியும். கிராமங்களில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல் நாட்டுக்கும், கழகத்திற்கு மிக மிக முக்கியமான ஒரு தேர்தல்.

வெறும் காசுக்காக அல்ல:

எனவே கழகத்தை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் இரவு பகல் பாராமல் உழைத்து, மாபெரும் வெற்றி பெற பாடுபட வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அந்த வாக்குறுதிகள் மக்களுக்கு போய் சேரும் வகையில் தேமுதிகவினர் வீடுதோறும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து, இதுவரை கேப்டன் செய்த மக்கள் பணிகள், உதவிகள் என அனைத்தையும் எடுத்துக்கூறி, வெறும் காசுக்காக மட்டுமில்லாமல், அந்த பகுதியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மக்களுக்கு புரிய வைத்து, தேமுதிகவின் வெற்றியை நிலை நாட்ட வேண்டும்.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.