#INDvENG: ஜானி சதம்.., இந்திய அணியை வதம் செய்து பழி தீர்த்த இங்கிலாந்து..!

இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இன்று இந்தியா, இங்கிலாந்து இடையே 2-ம் ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினர். சிறப்பாக விளையாடி வந்த ஜேசன் ராய் 55 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர், களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் உடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரின் கூட்டணியில் 177 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக விளையாடி வந்த பென் ஸ்டோக்ஸ் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 99 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களில் ஜானி பேர்ஸ்டோவ்வும் 124 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். இறுதியாக இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளது.

இந்திய அணியில் கே .எல் ராகுல் 108 , கேப்டன் கோலி 66, ரிஷாப் பண்ட் 77 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan