வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான “தேர்தல் சட்ட திருத்த மசோதா” – மாநிலங்களவையில் இன்று தாக்கல்!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,தேர்தல் ஆணையம் 4 வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது.

அதில்,குறிப்பாக வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவும் ஒன்று.இதற்கு  மத்திய அமைச்சரவை கடந்த வாரத்தில் ஒப்புதல் அளித்திருந்தது.

மத்திய அமைச்சரவை கருத்துப்படி,இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும்.மேலும்,பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் வாக்களிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. ஆனால்,ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படலாம் என்று கூறி ஆபத்தான இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவை அனைவரும் எதிர்க்க வேண்டும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான “தேர்தல் சட்ட திருத்த மசோதா”  நேற்று மக்களவையில் அவசரமாக தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரீசீலனைக்கு அனுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், நேற்று மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவால் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இதனால்,கடும் அமளி ஏற்பட்டு மக்களவை இரண்டு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில்,தேர்தல் சட்ட திர்த்த மசோதா மாநிலங்களைவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.அதே சமயம்,பட்டய கணக்காளர்கள், செலவு மற்றும் பணி கணக்காளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்கள் திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில்,வன்முறைப் போராட்டங்கள்,வேலைநிறுத்தங்கள் மற்றும் வகுப்புவாதக் கலவரங்களின்போது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால்,போராட்டக்காரர்கள் மற்றும் கலவரக்காரர்களிடமிருந்து பொதுச்சொத்துக்களை மீட்கும் மசோதா,டிசம்பர் 21 அல்லது 22 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா நேற்று கூறியுள்ளார்.