ஒமிக்ரான் அச்சுறுத்தல்:டிசம்பர் 31 வரை இரவு நேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாநிலத்தில் உள்ள எட்டு முக்கிய நகரங்களில் (நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) டிசம்பர் 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் முன்னதாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இதன்மூலம்,கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்தது. எனினும்,தற்போது இந்தியாவின் சில பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதற்கிடையில்,தென்னாப்பிரிக்கா நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது.இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,இந்த வைரஸிற்கு ஒமிக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல்,ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது.எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்துள்ளன.

இதனைத் தொடர்ந்து,இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று பரவத் தொடங்கியுள்ளது.அதன்படி,நாடு முழுவதும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.குறிப்பாக, மகாராஷ்டிரா,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில்,கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் குஜராத் மாநிலத்தில் உள்ள எட்டு முக்கிய நகரங்களில் நேற்று நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி,அகமதாபாத்,காந்திநகர், சூரத்,ராஜ்கோட்,வதோதரா,பாவ்நகர், ஜாம்நகர் மற்றும் ஜுனகர் ஆகிய 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்,வழிகாட்டுதல்களின்படி,இந்த நகரங்களில் உள்ள உணவகங்களில் இரவு 12 மணி வரை 75 சதவீத பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்பின்னர்,நள்ளிரவு 1 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரையிலான இந்த இரவு நேர ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,அவசர தேவை மற்றும் மருத்துவ காரணங்களுக்காக மட்டும் மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலைக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு,தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில்,தற்போது பல மாதங்களுக்கு பிறகு குஜராத்தில் முதல் முறையாக மீண்டும் இரவு நேர ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.