வியாபாரத்தை விட தேசப்பற்று முக்கியம்.! மாலத்தீவை ஓரம்கட்டிய EaseMyTrip.!

இந்தியாவை சேர்ந்த EaseMyTrip எனும் பயண ஏற்பாட்டு நிறுவனம் தற்போது மாலத்தீவுக்கான முன்பதிவுகளை தங்கள் தளத்தில் இருந்து நீக்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இம்மாத தொடக்கத்தில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவுக்கு சென்றார். அந்த பயணத்தின் போது பிரதமர் ஆழ்கடலில் நீச்சல் அடித்தும், கடற்கரையில் நடைபயணம் சென்றும் லட்சத்தீவின் அழகை ரசித்தார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில் ”சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம்” எனவும் பதிவிட்டார்.

பிரதமர் மோடியின் இந்த பதிவிற்கு எதிராக, மாலத்தீவு போல லட்சத்தீவை சுற்றுலா தளமாக மற்ற பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்கிறார் என்றும், எங்களை விட சிறப்பாக சுற்றுலா வசதிகளை லட்சத்தீவில் இந்திய அரசால் செயல்படுத்த முடியாது என்றும் பல்வேறு சர்சைக்குரிய கருத்துக்களை சமுக வலைத்தளங்கள் வாயிலாக மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியுனா, மல்ஷா ஷரீப் மற்றும் மஜ்ஜூம் மஜித் ஆகியோர் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி பற்றிய அவதூறு.! மாலத்தீவு அதிபர் பதவி விலக அந்நாட்டு முக்கிய தலைவர் வலியுறுத்தல்.!

பிரதமர் மோடிக்கு எதிரான மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கள் இந்தியாவில் மட்டுமல்லாது மாலத்தீவு அரசாங்கத்திடமும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஏனென்றால், மாலத்தீவுக்கு முக்கிய வருமானம் சுற்றுலாத்துறை மூலமாக வருகிறது. மாலத்தீவுக்கு அதிகமாக சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள். பிரதமர் மோடியை விமர்சித்த பின்னர் பல்வேறு பிரபலங்கள் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

மாலத்தீவு எம்பிக்கள் கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் அதிகரித்ததை அடுத்து, மரியம் ஷியுனா, மல்ஷா ஷரீப் மற்றும் மஜ்ஜூம் மஜித் ஆகியோரை அந்நாட்டு அரசாங்கம் எம்பி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும், மாலத்தீவு வெளியுறவுத்துறை சார்பில் இதற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச அளவில் பயண ஏற்பாடுகளை செய்யும் EaseMyTrip எனும் நிறுவனம், மாலத்தீவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், EaseMyTrip நிறுவனம் இனி மாலத்தீவு செல்வதற்கான முன்பதிவு மற்றும் விளம்பரங்களை தங்கள் தளத்தில் பதிவிட மாட்டோம் என கூறியுள்ளது.

EaseMyTrip தனது அறிக்கை வாயிலாக கூறுகையில், முதலில் தேசப்பற்று, பிறகு தான் வணிகம் என குறிப்பிட்டு , இந்திய குடிமக்கள் மற்றும் எங்கள் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி மாலத்தீவு அமைச்சர்கள் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில்  வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். மாலத்தீவுக்கான அனைத்து பயண முன்பதிவுகளையும் ஜனவரி 8ஆம் தேதி முதலே இடைநிறுத்திவிட்டோம்.

இதனை முன்னதாகவே அறிவித்து விட்டோம். இதற்கு நமது மக்கள் கொடுத்த ஆதரவு தேசத்தின் மீதான அன்பின் பிரதிபலிப்பாகும். மாலத்தீவுக்கு பதிலாக இந்தியாவில் உள்ள லட்சத்தீவுகள், கேரளா, அந்தமான், கோவா என பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவாசிகள் பயணிக்குமாறு EaseMyTrip தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.