பிரதமர் மோடி பற்றிய அவதூறு.! மாலத்தீவு அதிபர் பதவி விலக அந்நாட்டு முக்கிய தலைவர் வலியுறுத்தல்.!

சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுகளுக்கு சென்று நேரம் செலவிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை இணையத்தில் பதிவிட்டு, லட்சத்தீவு, வெறும் தீவுகளின் கூட்டமல்ல. அது, காலம் காலமாக நீடித்துவரும் பாரம்பர்ய மரபு, மக்களுக்கான சான்று. கற்கவும், வளர்வதற்குமான வாய்ப்பாக என் பயணம் அமைந்தது என மகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்.

இதனை குறிப்பிட்டு, மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டனர். மாலத்தீவை போல லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்ற பிரதமர் மோடி முயல்கிறார் என அந்நாட்டு இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்து இருந்தார். அதே போல, மாலத்தீவு அமைச்சர்கள் அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகியோரும் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பதிவு குறித்து விமர்சனம் செய்து இருந்தனர்.

பிரதமர் குறித்து அவதூறு கருத்து – மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் பதவி நீக்கம்..!

பிரதமர் மோடி குறித்த மாலத்தீவு அமைச்சர்களின் விமர்சனங்களை அடுத்து மாலத்தீவு அரசாங்கம் மீதான எதிர்ப்பை இந்திய பிரபலங்கள் பலமாக பதிவிட்டனர். பல்வேறு திரைபிரபலங்கள் தங்கள் விடுமுறை தினத்தில் இளைப்பாற முதலில் தேர்வு செய்யும் இடமாக மாலத்தீவு இருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தை அடுத்து பல்வேறு பிரபலங்கள் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர். மாலத்தீவு அரசின் பெரிய வருமானமே சுற்றுலாத்துறை தான்.அதிலும் இந்தியர்கள் தான் அதிக அளவில் பயணம் மேற்கொள்வர் என்பதால், தற்போது இந்த விவகாரம் அந்நாட்டிலேயே பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே, பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து விமர்சனம் செய்து இருந்த 3 அமைச்சர்களை அந்நாட்டு அரசாங்கம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் கூறுகையில், வெளிநாட்டுத் தலைவர்களுக்கு எதிராக சமூக ஊடக தளங்களில் வெளியிடப்பட்ட சர்ச்சையான கருத்துக்கள் குறித்து அரசாங்கம் அறிந்து நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், தனிப்பட்ட கருத்துக்கள் என்றுமே நாட்டின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, மாலத்தீவின் நாடாளுமன்ற சிறுபான்மையின தலைவர் அலி அசிம் நேற்று மாலத்தீவு பேசுகையில், ஜனநாயகவாதிகளாகிய நாங்கள், நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் நன்மதிப்பை நிலைநிறுத்துவதற்கும், அண்டை நாடுகளுடன் மாலத்தீவு தனிமைப்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் தேவையான முயற்சிகளை செய்து வருகிறோம். இந்திய பிரதமர் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்ததற்கு பொறுப்பேற்று அதிபர் முகமது முய்ஸுவை ஆட்சியில் இருந்து அகற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதற்காக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என சிறுபான்மையின தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி அசிம் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.