“நீட் என்றாலே குழப்பம்,பாதிப்பு,அநீதி என்றுதான் அர்த்தமா?” – மத்திய அமைச்சருக்கு எம்பி சு.வெங்கடேசன் கடிதம்!

நீட் என்றாலே குழப்பம்,பாதிப்பு,மாணவர்களுக்கான அநீதி என்றுதான் அர்த்தமா? என்றும்,நீட் முதுகலை மருத்துவ தேர்வுகளை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

2021 நீட் முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிவதற்கு முன்பே 2022 நீட் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே,நீட் என்றாலே குழப்பம்,பாதிப்பு,மாணவர்களுக்கான அநீதி என்றுதான் அர்த்தமா? என்று கேள்வி எழுப்பிய மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள்,நீட் முதுகலை மருத்துவ தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில்,எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாவது:

“மாண்புமிகு அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா அவர்களே,நீட் முதுநிலை (NEET PG 2021) கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள முக்கியமான சிக்கலை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

அதாவது,AIQ/Central &Deemed/PG DNB உள்ளிட்ட காலி இடங்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் மார்ச் 11 மற்றும் மார்ச் 16 முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந்நிலையில்,நீட் முதுகலை கவுன்சிலிங் 2021 முடிவதற்கு முன்பே,நீட் முதுநிலை 2022 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு,மார்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதன்காரணமாக,நீட் முதுநிலை (NEET PG)2022 க்குப் பிறகு தேதிகளில் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளும் பல விண்ணப்பதாரர்கள் பெரும் சோதனையில் உள்ளனர் மற்றும் ஒரு வருடத்தை வீணடிக்க நேரிடும் என்ற அச்சத்திலும் உள்ளனர்.

இது நியாயமற்றது என்று நான் கருதுகிறேன்,முந்தைய ஆண்டுக்கான கவுன்சிலிங் முடிவதற்குள் தேர்வை நடத்துவது என்ற முடிவு மனப்பூர்வமின்றி எடுக்கப்பட்டது. நீங்கள் விரைவில் தலையிட்டு,தேர்வுகளை ஒரு மாதமாவது ஒத்திவைத்து நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”,என்று வலியுறுத்தியுள்ளார்.