“வெற்றி கொண்டாட்டம் வேண்டாமே” – மே.வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்…!

மேற்கு வங்க இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் போது அல்லது அதற்குப் பிறகு வெற்றி கொண்டாட்டம் கூடாது என்பதை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்றார்.இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும்.

அதற்கேற்ப,பவானிபூர் எம்எல்ஏ சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனால்,பவானிபூர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு,அத்தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியில் பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரிவால் களமிறக்கப்பட்டார்.இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார்.

இதனையடுத்து,செப்.30-ம் தேதி பவானிபூர் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதே சமயத்தில் ஜங்கிபூர் மற்றும் சமஸ்ர்கஞ் ஆகிய தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

அதன்படி,19 வது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு 52,017 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா முன்னிலையில் உள்ளார்.இதனையடுத்து கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் குடியிருப்புக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.மேலும்,ஜங்கிபூர் மற்றும் சமஸ்ர்கஞ் ஆகிய தொகுதிகளிலும் திரிணாமூல் கட்சி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில்,கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் போது அல்லது அதற்குப் பிறகு வெற்றி கொண்டாட்டமோ,ஊர்வலமோ நடைபெறக் கூடாது என்பதை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை நடக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும்படியும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.