ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை திமுக அரசு நிறுத்த வேண்டும் – அதிமுக தலைமை

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கரின் வீட்டில் ஐ.டி ரெய்டு என அதிமுக தலைமை கண்டனம்.

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த திடீர் ஐடி சோதனையால் அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு நடைபெறும் முதல் சோதனையாகும். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அதன்மூலம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கின்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு,  வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தாமலும், தமிழக வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்தாமலும், எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக அதிமுகவுக்கு பொதுமக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவல்துறையை முடுக்கிவிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சர்கள் பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், அதனை திசை திருப்புவதற்காக, பொய்யான குற்றசாட்டுகளை முன்வைத்து திமுக அரசு ஈடுபட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் குறுகிய காலத்திலேயே மக்களுடைய அதிருப்தியை பெற்றிருக்கிற திமுக அரசு, மக்களின் கவளத்தை திசை திருப்பி வருகிறது. அதிமுகவை அழித்து விடலாம், ஒழித்து விடலாம் என்று கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும் என்ற வரலாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியும். இது போன்ற அடக்குமுறைகளை எல்லாம் தாங்கி வலுப் பெற்ற இயக்கம் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் போன்றவர் அறிவர்.

எனவே, காழ்ப்புணர்ச்சியோடு காவல்துறை மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்  விஜயபாஸ்கர் மீது காவல்துறையை ஏவி விட்டு அவரது இல்லத்தில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்த நினைக்கும் திமுக அரசுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு கழகம் உறுதுணையாக இருக்கும். ஸ்டாலின் அரசினுடைய இந்த அராஜகத்தையும், அத்துமீறல்களையும், தொண்டர்களின் துணையோடு, இதனை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்