வேட்புமனுவை மறந்த திமுக வேட்பாளர்.. ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த அமைச்சர்கள்!

Thanga TamilSelvan: வேட்புமனு படிவத்தை மறந்து வைத்துவிட்டு ஆட்சியாளர் அலுவலகம் வந்த திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த சூழலில், வேட்புமனு தாக்கல் கடைசி நாளான இன்று தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது, அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, கம்பம் எம்.எல்.ஏ.ராமகிருஷ்ணன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் வந்தனர். அந்த சமயம், திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனது வேட்புமனு படிவத்தை மறந்து வைத்துவிட்டு ஆட்சியாளர் அலுவலகம் வந்ததாக கூறப்படுகிறது.

அதாவது தான் பூர்த்தி செய்த வேட்புமனு படிவத்தை மறந்து வைத்துவிட்டு வந்துள்ளார். இதன்பின் தங்க தமிழ்செல்வன் சிறிது நேரம் அலுவலகம் வாயிலில் காத்திருந்தார். வேட்புமனுவை மறந்ததால் அவருடன் வந்த அமைச்சர்களும் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

பின்னர், தனது உதவியாருக்கு தொலைப்பேசியில் அழைத்து, வேறொரு காரில் மறந்து வைத்த வேட்புமனு படிவத்தை எடுத்து வர சொல்லி இருக்கிறார். இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய காலதாமதம் ஆனது. இதனையடுத்து, வேட்புமனு படிவம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்