மாவட்ட நீதிபதி மரணம் – அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் ஜார்க்கண்ட் அரசுக்கு உத்தரவு…!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்ட முதன்மை நீதிபதி மரணம் தொடர்பாக ஜார்க்கண்ட் அரசு அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் மாவட்ட முதன்மை நீதிபதி உத்தம் ஆனந்த் அவர்கள் சாலையோரம் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த நீதிபதியின் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கு குறித்த விசாரணையை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைமை செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோர் இந்த நீதிபதியின் மரணம் குறித்த விரிவான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மேலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் நாடு முழுவதும் உள்ள மற்ற இடங்களிலும் நீதிபதிகள் மீதான தாக்குதல் மற்றும் அவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு, நீதித்துறையின் மாண்புக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தக்கூடிய நிலை உள்ளதால் அடுத்த இரண்டு வாரத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் இது குறித்து நோட்டிஸ் அனுப்பும் முடிவு எடுக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Rebekal