இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் அதிகரிக்கும் குழந்தை தொழிலார்கள்.. DCPCR வருத்தம்!

கொரோனா ஊரடங்கால் குழந்தைகள் பலரும் வேலைக்கு சென்றுவருவதாகவும், அதுதொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளதாக டெல்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (DCPCR) தெரிவித்துள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு கடந்த மார்ச் மாத இறுதி முதல் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி கடைகள், பள்ளிகள், என அனைத்தும் மூடப்பட்டது.

இந்த ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பலரும் தங்களின் வேலையினை இழந்து, குடும்பங்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வந்தனர். புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப பேருந்து, ரயில் வசதி இல்லாமல் நடந்தே சென்றனர். அதனை தொடர்ந்து சில தளர்வுகள் அறிவித்த நிலையில், பலரும் கிடைக்கும் வேலையை செய்து வந்தனர்.

இந்த கொரோனா ஊரடங்கின் போது குழந்தைகள் பலரும் வேலைக்கு சென்றுவருவதாகவும், அதுதொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளதாக டெல்லி காவல்துறை மற்றும் டெல்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (DCPCR) தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள், கொரோனா பரவலின்போது ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள காரணமாக பல குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களை கடத்தல்காரர்கள் குறிவைத்து வருவதாகவும், தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புமாறு ஏழை பெற்றோர்களிடம் வற்புறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

ஜூலை இரண்டாவது வாரத்தில், கிழக்கு டெல்லியில் காந்தி நகரில் இருந்து 12 குழந்தைத் தொழிலாளர்களை DCPCR போலீசார் மீட்டுள்ளனர். அந்த குழந்தைகளுக்கு 12 முதல் 18 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் ஒரு ஆடை தொழிற்சாலை மற்றும் சைக்கிள்-மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடைகளில் வேலை பார்த்து வந்ததாகவும், அவர்கள் முகக்கவசம் அணியவில்லை, பாதுகாப்பற்ற மற்றும் சுகாதாரமற்ற நிலையில் வேலை செய்கிறார்கள் என வருத்ததுடன் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, 20 ஆண்டுகளில் முதன்முறையாக குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்பதை உலகம் காணக்கூடும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவித்துள்ளதாகவும், இதனால் பல குழந்தைகளின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக DCPCR  தெரிவித்துள்ளது.

மேலும், குழந்தை தொழிலார்கள் குறித்த வழக்குகள் இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருவதாக டெல்லி போலீசாரும் தெரிவித்தனர். பொதுமுடக்க காலத்தில் வேலையாட்கள் இல்லாத காரணத்தினால், ஏழை பெற்றோர்களிடம் தங்களின் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாறு வற்புறுத்திக்கொண்டே வருவதாக அவர்கள் தெரிவித்தார்கள்.