இன்னும் ஒருசில நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம்… டெல்லி அமைச்சர் பரப்பரப்பு பேட்டி!

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் ஒரு சில நாட்களில் கைது செய்யப்படலாம் என்று அம்மாநில அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவுமான சவுரப் பரத்வாஜ் கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடனான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி உட்பட சில மாநிலங்களில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே கூட்டணி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம், மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறது. அவர் ஆஜராகாததில் நீதிமன்றத்தில் வழக்கும் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த சூழலில், தன்னை கைது செய்ய பாஜக விரும்புவதாகவும், தங்களது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டி வருவதாகவும் கெஜ்ரிவால் குற்றசாட்டியிருந்தார்.

Read More – விவசாய தலைவர்களுக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து!

இதனால், சமீபத்தில் டெல்லி சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது. இதுபோன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுற்றி பரப்பரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்னும் 2, 3 நாட்களில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார்.

தேசிய தலைநகர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது, அடுத்த ஒரு சில நாட்களில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம். அமலாக்கத்துறை மட்டுமின்றி சிபிஐயும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. இதிலிருந்து பாஜகவின் பதற்றம் அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது.

காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்தால், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்படுவார், அவரை பாதுகாப்பாக வைத்திருக்க ஒரே ஒரு வழி, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என பாஜகவைச் சேர்ந்தவர்கள் தங்களிடம் கூறி வருவதாக பரத்வாஜ் கூறியுள்ளார்.

மேலும், பரத்வாஜ் கூறியதாவது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக துடிக்கிறது. இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். ஆம் ஆத்மி – காங்கிரஸும் எந்த மாநிலத்தில் கூட்டணி அமைத்தாலும், அது பாஜகவுக்கு நெருக்கடி ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment