இந்தியாவில் முதல்முறையாக தொடங்கப்பட்ட கொரோனா தொடர் கண்காணிப்பு மையம்-அமைச்சர் விஜயபாஸ்கர்.!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நுரையீரல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்யும் விதமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொடர் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். அதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்த பலர் இருதய பிரச்சனை, சிறுநீரக மற்றும் கல்லீர பிரச்சனைகள், நிமோனியா மற்றும் மூளை நரம்பியல் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது அவர்களுக்காக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொடர் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

இந்தியாவில் கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் என்பது இதுவே முதன்முறையாகும். திறந்து வைத்ததற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமடைந்த 8 லட்சம் பேரில், நுரையீரல் பிரச்சனையால் 10 முதல் 15 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர்கள் அனைவரும் இந்த மையத்தில் பரிசோதனை செய்யலாம் என்றும், கொரோனாவிற்கான சிகிச்சையை தமிழகத்தில் உள்ள எந்த மருத்துவமனையில் பெற்றிருந்தாலும்,அவர்கள் சிகிச்சை முடிந்து 4 வாரங்களுக்கு பின்னர் இந்த கொரோனா தொடர் கண்காணிப்பு மையத்தில் சென்று பரிசோதனை செய்யலாம் என்று கூறியுள்ளார். சென்னையை தொடர்ந்து மதுரையிலும் கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.