பாஜக போஸ்டரில் காங்கிரஸ் தலைவர் புகைப்படம்.! சர்ச்சையான போஸ்டர்.!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த வருட இறுதிக்குள் 5 மாநில சட்ட மன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய மாநிலங்களில் பொது தேர்தல் நடைபெற உள்ளதால் அந்தந்த மாநிலங்களில் பிரதான கட்சிகள் தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளன.

இதில் ராஜஸ்தான் மாநிலத்தில், மொத்தமுள்ள 200 இடங்களில் 100 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் முதல்வராக பொறுப்பில் உள்ளார். நாத்வாரா  தொகுதி எம்எல்ஏவாகவும் , மாநில சட்டமன்ற சபாநாயகராகவும் சி.பி.ஜோஷி செயல்பட்டு வருகிறார்.

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, பாஜக கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர், அண்மையில் ஒரு போஸ்டர் அடித்து ஆட்டோக்கள் பின்புறம் சாட்டியுள்ளார். அந்த போஸ்ட்டரில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தது.

இதில் என்ன குழப்பம் என்றால் அம்மாநில பாஜக எம்பியும் மூத்த பாஜக நிர்வாகியுமான சந்திர பிரகாஷ் ஜோஷி புகைப்படத்திற்கு பதிலாக காங்கிரஸ் மாநில தலைவரும், சட்டமன்ற சபாநாயகருமான சி.பி.ஜோஷியின் புகைப்படத்தை பதிவிட்டு போஸ்டர் அடித்து விட்டனர். அதனை சில ஆட்டோக்களிலும் ஒட்டிவிட்டனர்

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி கேலி கிண்டலுக்கு உள்ளாகிவிட்டது.  சிரோஹியில் உள்ள ரியோடார் தொகுதியில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் குறித்து மூத்த பாஜக நிர்வாகி கூறுகையில்,’ இந்த போஸ்டர் பற்றி நாங்கள் அறிந்ததும்,  உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுத்துவிட்டோம் என கூறினார் . இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பாஜகவின் ஜக்சி ராம் உள்ளார்.

இந்த போஸ்டர் குறித்து, காங்கிரஸ் தலைவர் பவானி சிங் பதானா கூறுகையில் ,  பாஜக எம்பி சந்திர பிரகாஷ் ஜோஷி தனது பகுதியைத் தாண்டி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க முடியவில்லை என்றும், மாநிலத்தில் உள்ள அவரது கட்சிக்காரர்கள் அனைவருக்கும் அவர் எப்படி இருப்பார் என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.