வெற்றி துரைசாமி மறைவு: ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரங்கல்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி ஆற்றில் மூழ்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது. அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “ ஒருங்கிணைந்த தென் சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி அவர்களுடைய மகன் வெற்றி துரைசாமி அவர்கள் பிப்ரவரி 4-ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனம் நிலை தடுமாறி சட்லஜ் நதிக்கரையில் விழுந்ததைத் தொடர்ந்து, அவரது உடலை கடந்த 8 நாட்களாகத் தேடிவந்த நிலையில், இன்று அவரது உடல் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்கள் பயன்பெறும் வகையில் கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருபவருமான அன்புச் சகோதரர் சைதை துரைசாமி அவர்கள், தாலாட்டி, சீராட்டி, அழகு பார்த்து வளர்த்த தன் ஒரே மகனை இழந்தது. அவருக்கு தாங்கிக்கொள்ள முடியாத, ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். மகளை இழந்து மிகுந்த சோகத்தில் வாடும் சைதை துரைசாமி அவர்களுடைய துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடியும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான அன்புச் சகோதரர் திரு. சைதை ளு. துரைசாமி அவர்களின் மகன் திரு. வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும்
அடைந்தேன்.

மகனை இழந்து தவிக்கும் அன்புச் சகோதரர் துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகனின் இழப்பினைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அன்புச் சகோதரர் திரு. சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அளிக்க எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Leave a Comment