12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? முதல்வர் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3-ம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியானது. அதற்கான செய்முறை தேர்வுகள் வரும் 16-ம் தேதி முதல் தொடங்குகின்றன. அந்தவகையில், தமிழகம் முழுவதும் 9.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 6,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதல்வர் பழனிசாமி,நாளை மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வரின் முடிவு குறித்து அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.