#IPL2021: மொத்தம் 350 சிக்ஸ்.. ஐபிஎல் தொடரில் மீண்டும் புதிய சாதனை படைத்த கெயில்!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கெயில், ஐபிஎல் தொடரில் 350 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்தது. 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் அணி, கடைசிப்பந்து வரை போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதில் அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன், 63 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்தப்போட்டியில் மயங்க் அகர்வால்க்கு பின் களமிறங்கிய கிறிஸ் கெய்ல், 2 சிக்ஸர், 4 பவுண்டரி என மொத்தம் 40 ரன்கள் அடித்து அசத்தினார். இவர் நேற்றைய போட்டியில் ஸ்டோக்ஸ் வீசிய முதல் ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தார். இதன்மூலம் அவர் ஐபிஎல் தொடரில் 350 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். இதுவரை 133 போட்டிகளில் விளையாடிய கிறிஸ் கெயில், 4800 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார்.

மேலும், ஐபிஎல் தொடரில் 351 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவரைதொடர்ந்து இரண்டாம் இடத்தில் பெங்களூர் அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் 237 சிக்ஸர்களும், மூன்றாம் இடத்தில சென்னை அணியின் கேப்டன் தோனி 216 சிக்ஸர் அடித்து முன்னிலை வகிக்கின்றனர்.