பரபரப்பு.! மிளகாய் பொடி தூவியும், சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடித்தும், ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள்.!

  • தஞ்சாவூரில் ஆதீஸ்வரர் சுவாமி கோவிலில் 3 அடி உயரமுள்ள ஆதீஸ்வரர் ஐம்பொன் சிலை மற்றும் 13 வெண்கல சிலைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்ற மர்ம நபர்கள்.
  • கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பூக்குளம் பகுதியில் ஜைன முதலி தெருவில் ஆதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் வழிபடும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் பக்க்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வந்தது. இக்கோவில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது. இந்த கோவிலில் வழக்கம்போல் நேற்று மாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இரவு கோவிலின் கதவு அடைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு வந்தவர்கள் கிரில் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி உடனடியாக தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் நேற்று நள்ளிரவில் கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள் கோயிலை சுற்றி மிளகாய் பொடி தூவியும், பின்புற சுவர் வழியாக ஏறிக்குதித்து உள்ளே வந்து கேட்டின் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்துள்ளனர். பின்னர் உள்ளே சிசிடிவி கேமராவில் இருப்பதை கண்ட மர்மநபர்கள் 2 கேமராக்களின் மீது ஸ்பிரே அடித்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். ஒரு கேமராவை கவனிக்காததும் தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த 3 அடி உயரமுள்ள ஆதீஸ்வரர் ஐம்பொன் சிலை மற்றும் வெண்கலத்தால் ஆன சரஸ்வதி, ஜோலமணி, பஞ்சநதீஸ்வரர், நதீஸ்வரர், மகாவீரர் உள்ளிட்ட 13 வெண்கல சிலைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றது கண்டறியப்பட்டது. பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் மர்ம நபர்களின் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்