முதல்வர் வேட்பாளர் விவகாரம் ! எதுவாக இருந்தாலும் தலைமை தான் அறிவிக்கும் – ஹெச்.ராஜா விளக்கம்

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ,முருகனும் அறிவிக்க முடியாது ,நானும் அறிவிக்க முடியாது என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் என்று கூறினார்.முருகனை தொடர்ந்து பாஜகவின் தலைவர்களான  வானதி சீனிவாசன்,அண்ணாமலை உள்ளிட்டோர் இதே கருத்தை கூறி வருகின்றனர்.ஏற்கனவே அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களது பேச்சுக்கள் அதிமுக -பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு அதிமுகவினரும் பதில் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற அதிமுக பிரச்சார கூட்டத்தில் ,திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கு இடமில்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியிருந்தார்.

இந்நிலையில் கடலூரில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  அதிமுக மாநில கட்சி,பாஜக தேசிய அளவிலான  கட்சி.அதனால் அதிமுக இங்கு வேட்பாளரை அறிவித்துள்ளார்கள்.ஆனால் தேசிய கட்சியான பாஜக ஆட்சிமன்ற குழுவை கூட்டி தான் வேட்பாளரை அறிவிக்கும். இதைத்தான் மாநில தலைவர் கூறியுள்ளார்.முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ,முருகனும் அறிவிக்க முடியாது ,நானும் அறிவிக்க முடியாது.எதுவாக இருந்தாலும் தேசிய தலைமை ஆட்சிமன்ற குழுவை கூட்டி தான் அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.