“போதி தர்மரின்” மரபணுவில் வந்தவர் முதல்வர் ஸ்டாலின் – காங்.எம்.எல்.ஏ.செல்வப் பெருந்தகை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது.இதனிடையே,விளையாட்டுத்துறையில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் திமுக அரசு மேற்கொள்ளும் என்று தமிழக சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில்,போதி தர்மரின் மரபணுவில் வந்தவர்தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சட்டபேரவையில் பேசுகையில்:”தமிழக முதல்வர் அவர்கள் கட்சிக்கும்,ஆட்சிக்கும் எடுத்துக்காட்டாக உள்ளார்.உடல் மற்றும் உள்ள வலிமையில் தமிழக மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

என்னுடைய தமிழகமே:

உடல் வலிமை மற்றும் உள்ளம் வலிமை இருந்தால்தான் அறிவுத்திறன் அதிகரிக்கும்.அதில் தான் மட்டும் இருந்தால் போதாது என்றும் என்னுடைய தமிழகமே இருக்க வேண்டும் என்று இத்தகைய அறிவிப்பை முதல்வர் அறிவித்துள்ளார்.

ராகுல்காந்தியின் விருப்பம்:

மேலும்,எங்கள் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் அண்மையில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த சமயம்,அவரது வயதை பற்றி எங்களிடம் பேசினார்.அப்போது முடியவில்லை என்று அவர் கூறிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டுகிறார் என்று நாங்கள் கூறினோம்.

உடனே ராகுல் அவர்கள் அடுத்த முறை தமிழகம் வரும்போது முதல்வருடன்,தானும் சைக்கிள் ஓட்ட உள்ளதாக விருப்பம் தெரிவித்தார்.இவ்வாறு முதல்வர் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளார்.

உலகம் முழுவதும் விளையாட்டுகள்:

முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் எனக்கு ஒன்றை மட்டும் நினைவுப்படுத்துகிறது.அதன்படி,நான் பிறந்த மண்ணில் பிறந்த போதி தர்மர் அவர்கள்தான் உலகம் முழுவதும் விளையாட்டுகள் மற்றும் தற்காப்பு கலைகளை சொல்லி கொடுத்தவர்.ஒரு வேளை போதி தர்மர் இல்லையென்றால் மேலை நாடுகளில் இந்த விளையாட்டுகள் விரிவடைந்து இருக்காது.

இதனை மேலை நாட்டவர்களும் ஏற்றுக் கொண்டதால்தான் அவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை அதிக அளவில் பெறுகிறார்கள்.ஆனால்,நம் நாடு பின்தங்கி விட்டது.

போதி தர்மர் மரபணுவில் வந்த முதல்வர்:

ஒரு முறை ஜப்பான் வீரர் ஒருவர் தங்கப்பதக்கம் பெறும்போது,தனக்கு இந்த திறனும் சக்தியும் போதி தர்மரிடம் இருந்துதான் கிடைத்தது என்று கூறினார்.அவ்வாறு புகழ்பெற்ற போதி தர்மர் மரபணுவில் வந்தவர்தான் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,இதனால்தான் விளையாட்டுகளை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்”,என்று தெரிவித்தார்.