ரூ.6.64 லட்சம் கோடி… முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி – முதலமைச்சர் உரை!

சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டாவது நாள் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதன்பின், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருகை தனது சிறை விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து, நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இமாலய சாதனை செய்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிற்கு வாழ்த்துகள். உலகமே வியக்கும் வகையில் சென்னையில் இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி என் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. இந்த இரண்டு ஆண்டுகளில் 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன், 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளேன்.

புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்!

தற்போது தமிழக தொழிற் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு அமையும். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.6.64 லட்சம் (6,64,180) கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை சேர்த்து மொத்தமாக, 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

மேலும் கூறியதாவது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக முதலீடு கிடைத்துள்ளது. சென்னையில் நடந்த 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மகத்துவம் என்னென்றும் பேசப்படும். முதலீடுகள் செயல்வடிவம் பெறுவதை தொடர்ந்து கண்காணிப்பேன். ஸ்டார்ட் அப் துறையில் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

தமிழக அரசின் இலக்கை எட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் துணை நிற்கும். முதலீடுகளை ஈர்ப்பது மூலம் வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும். ஏற்றுமதி துறையில் தமிழகம் போட்டியிடும் திறம் மேலும் அதிகரிக்கும். மாணவர்கள் அதிகளவில் இந்த மாநாட்டை பார்வையிட்டுள்ளனர். உலக அளவில் முதலீட்டுக்கு சிறந்த இடம் தமிழ்நாடு தான்.

இதனால், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தொழில்துறை அமைச்சர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்படும். ஒப்பந்தங்களை செயல்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு குழு செயல்படும் என்றும் முதலீடுகளை செய்ய உறுதியளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்