ஆய்வகங்கள் மருந்தின் தரத்தை உறுதி செய்த பிறகே இருமல் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி என அறிவிப்பு.
இந்தியாவில் இருந்து இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய இனி தரச்சான்று அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் மருந்தின் மாதிரியை குறிப்பிட்ட அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும். ஆய்வகங்கள் மருந்தின் தரத்தை உறுதி செய்த பிறகே, இருமல் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படும் என்றுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உஸ்பெகிஸ்தானின் காம்பியாவில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் டஜன் கணக்கான குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இருமல் மருந்து ஏற்றுமதிக்கு தரச்சான்று கட்டாயம் என வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
அதன்படி. இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள் ஜூன் 1 முதல் குறிப்பிட்ட அரசு ஆய்வகங்களில் தங்கள் தயாரிப்புகளை சோதித்து தரச்சான்று பெற வேண்டும் எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு காம்பியாவில் 70 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தானில் 19 குழந்தைகளும் இறந்ததில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்கள் தொடர்புடையது என கூறப்பட்டது.
