மணிப்பூரில் பேருந்து கவிழ்ந்து 7 மாணவர்கள் பலி.! பள்ளி சுற்றுலாக்களுக்கு மாநில அரசு உடனடி தடை.!

மணிப்பூரில் இன்று பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தார் அம்மாநில முதல்வர்.

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் இன்று சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பீஸ்னுபூர் – கெளபம் சாலையில் 2 பேருந்துகள் சென்றபோது மாணவர்கள் பயணம் செய்த பேருந்து விபத்தில் சிக்கியது.

இம்பாலில் இருந்து 55 கிமீ தொலைவில் உள்ள லாங்சாய் மலை பிரதேசத்தில் பேருந்து திடீரென திருப்ப முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் இறந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மூடுபனி காரணமாக பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதைக் கருத்தில் கொண்டு, அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க 2023 ஜனவரி 10-ஆம் தேதி வரை பள்ளிகளில் சுற்றுலா பயணங்களை நடத்தக் கூடாது என தடை விதித்து மணிப்பூர் மாநில கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

விபத்து அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் கூறுகையில், இன்று பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தேன். மாணவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதுடன், அவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று உறுதியளித்தேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment