மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல்!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த நிதியாண்டுக்கு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். தேர்தலுக்குப் பிறகு புதிதாக பொறுப்பேற்கும் அரசு புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இதனால், நாளை பாஜக அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் தாக்கல் செய்யும், முழு அளவிலான கடைசி பட்ஜெட் இதுவாகும். நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பதால், மாத சம்பளம் பெறுவோர் பயனடையும் வகையில், வருமான வரி விலக்குக்கான வரம்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Image result for அருண் ஜெட்லி பட்ஜெட்
மேலும் இரண்டரை லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உடையவர்கள் தற்போது செலுத்தும் 10 சதவீத வருமான வரி, 5 சதவீதமாகக் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல், சிறுவியாபாரிகளின் கொள்முதல் சக்தியை அதிகரிக்கும் வகையில், கொள்முதலுக்கு வரிவிலக்கு வரம்பு இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ செலவுக்கான வரிச்சலுகை வரம்பு 15 ஆயிரம் ரூபாய் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவதை தடுக்கும் வகையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையை நவீனமயமாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால், ரயில்வே திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளும் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment