#Breaking:மேகதாது விவகாரம்;அனைத்துக் கட்சி குழு இன்று டெல்லிக்கு திடீர் பயணம்!

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில்,உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு அண்மையில் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கிடையில்,தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்தபின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது.வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆணையத்தின் கூட்டத்தில்,அனைத்து விவகாரங்களுக்கு விவாதிக்கப்படும்.மேலும்,காவிரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு. நாங்கள் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக இல்லை, யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து,காவிரி உரிமையை காக்க தமிழக அரசு போராடும் என்றும் ஒருபோதும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் எனவும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்தார்.மேலும்,மேகதாது அணையை கர்நாடகா அரசு கட்ட நினைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது,தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என்றும்,தமிழக அரசின் சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் அனைத்துக் கட்சி குழுவானது இன்று டெல்லி செல்கிறது.அதன்பின்னர்,இக்குழுவானது மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment