Breaking:வைகை ஆற்றில் இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு!

உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.அப்போது,ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்பதும்,மற்றொருவரான 60 வயது மூதாட்டி யார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும்,கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களும் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.இதனைத் தொடர்ந்து,நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களின் விவரங்களை அறிய 9498042434 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில்,வைகை ஆற்றில் இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.

மேலும்,படுகாயமடைந்தவர்களுக்கு  ரூ.2 லட்சமும்,லேசான காயமடைந்தவர்களுக்கு  தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாகவும்,அவர்களின் முழு சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்பதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.