#BREAKING: மாணவியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னையில் படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய 12ஆம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவிப்பு.

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த வாலிபால் வீராங்கனையான 12-ம் வகுப்பு மாணவி சிந்து கடந்த ஆண்டு வீட்டின் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரு கால் எலும்புகளும் முறிந்தன. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில், படுத்த படுக்கையாக 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

இந்த நிலையில், 12ம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!”, கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்