#BREAKING: மின்கட்டண உயர்வு; செப்.16ல் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – ஈபிஎஸ் அறிவிப்பு

மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 16ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் என ஈபிஎஸ் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், இதனை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் வரும் 16-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் காலை 10.30 மணியளவில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் இந்த கண்டன ஆர்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர் செய்திட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விடியும், விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்கக் கூடிய செயல்களை மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறது இந்த விடியா திமுக அரசு.

எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்தபோது, 10 ஆண்டுகளாக எதைச் சொல்லியும் மக்களை திசை திருப்ப முடியவில்லை என்ற எண்ணத்தை உள்வாங்கி, பொய்யைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்று எண்ணி, திமுக பல பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, புறவாசல் வழியாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. மின், பேருந்து கட்டணத்தையோ, பால் விலையையோ, உயர்த்தமாட்டோம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள், தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களின் தலையில் ஆயிரம் செந்தேள்கள் கொட்டியதைப் போல, கடுமையான துயரத்தையும், வலியையும் ஏற்படுத்துகின்ற விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் என்பதையும் சொல்லி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த உயர்வு இம்மாதத்தில் இருந்தே அமலுக்கு வரும் என்ற அதிர்ச்சிகரமான செய்தியையும் சொல்லி இருக்கிறார்கள். மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள விடியா திமுக அரசைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலிறுத்தியும், அதிமுக சார்பில், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், வரும் 16 அன்று காலை 10.30 மணியல், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். மக்களை பல்வேறு வகைகளில் வாட்டி வதைக்கும் இந்த விடியா திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment