#Breaking:முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு பதியலாம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கர்நாடகா:நிலம் மறுசீரமைப்பு விவகாரத்தில் ஊழல் செய்ததாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது சிறப்பு குற்றவியல் வழக்கு பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

2006-07 ஆம் ஆண்டு பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்தபோது,கர்நாடக தொழில்துறை பகுதி மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ், மாநில அரசு தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைப்பதற்காக பெல்லந்தூர்,தேவரபீசனஹள்ளி,கரியம்மன அக்ரஹாரா மற்றும் அமானிபெல்லந்தூர் கானே ஆகிய இடங்களில் 434 ஏக்கர் தனியார் நிலத்தை அரசு கையகப்படுத்தியது.

சட்ட விரோதமாக மறுமதிப்பீடு:

அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலம்,சட்ட விரோதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டு, மற்றொரு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசுக்கு மற்றும் அசல் நில உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,நிலம் மறுசீரமைப்பு விவகாரத்தில் விவகாரத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு:

இந்நிலையில்,நிலம் மறுசீரமைப்பு விவகாரத்தில் ஊழல் செய்ததாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது சிறப்பு குற்றவியல் வழக்கு பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும்,ஊழல் தடுப்புச் சட்டம், 1988ன் 13(2)ன்படி,இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக்ஆயுக்தா போலீசாருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக,நிலம் மறுமதிப்பீடு செய்ததற்காக முன்னாள் முதல்வர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆதாரம் இல்லை என்று கர்நாடக லோக்ஆயுக்தா போலீசார் இந்த விவகாரத்தில் மூடல் அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.