#BREAKING: இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்

தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பதும், வழங்குவதும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து.

தேர்தல் சமயத்தில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்கக் கோரி அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பதிலை செய்தி தாளில் படித்தோமே தவிர நேற்று இரவு வரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறினார். நாங்கள் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டுமா என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மத்திய அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறிய நிலையில், தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பார்களா ? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும் என கட்டாயம் இல்லை என  தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பெரும்பாலான தேர்தல் இலவச வாக்குறுதிகள் அறிக்கையில் இடம்பெறுவதில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இதன்பின், தலைமை நீதிபதி ரமணா கூறுகையில், இலவசங்கள் சமூக நல திட்டங்களும் வெவ்வாறானவை. பட்டினியால் தவித்த மக்களுக்கு உணவளிக்க மத்திய அரசும் சில திட்டங்களை வைத்துள்ளது.

இலவசங்களால் அரசு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இலவசத்தால் மின்சாரத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை கொடுங்கள், இதை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட்டால் அதை இந்தியா போன்ற நாட்டில் செயல்படுத்த முடியாது. எனவே, இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.

அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பதும், வழங்குவதும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இலவசங்களுக்கு செலவிடும் பணத்தை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிக்கு பயன்படுத்தலாம் என தெரிவித்தார். பொருளாதார இழப்பு, மக்கள் நலன் இரண்டுக்கும் ஒரு சமநிலையில் இருக்க வேண்டும். அதனால்தான் இந்த விவகாரத்தில் உங்கள் ஒவ்வொருவரின் கருத்து, பார்வை மற்றும் எண்ணங்களை மென்மொழிய கூறுகிறோம் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனிடையே, இலவச அறிவிப்புகள் வாயிலாகத்தான் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றால், நாம் பொருளாதார பேரழிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதம் முன்வைத்தது.

கட்டணமில்லா பேருந்து திட்டம் இலவசமா?, இலவசத் திட்ட அறிவிப்புகள் ஒரு சிக்கலான விவகாரம். இதை ஆராய போதுமான தகவல்கள் தேவை என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியுள்ளார். இலவசத் திட்டங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என்று ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment