Breaking:இனி தேரோட்ட வீதிகளில் புதைவட மின்கம்பி – அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு!

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால்,11 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.மேலும்,இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து,களிமேடு தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு,பிரதமர் மோடி,அதிமுக, திமுக சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.அதே சமயம்,தஞ்சையில் தேர் சப்பரம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து,தேர் விபத்து ஏற்பட்டது தொடர்பாக விசாரிக்க வருவாய்துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மின்சாரத்துறை செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.

மேலும்,விபத்துக்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு இனி வரும் காலங்களில் இதுபோல் நடைபெறாமல் தடுக்க விசாரணைக் குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,வரும் காலங்களில் தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதைவட மின்கம்பிகளாக மாற்றப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

திருவாரூர் உள்ளிட்ட 3 கோயில் தேரோடும் வீதிகளில் உள்ள மின் இணைப்பை புதைவடமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.