#BREAKING : அதிமுக பொதுக்குழு வழக்கு – விசாரணை தொடங்கியது..!

பொதுச் செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வாதம். 

சென்னை உயர்நீதிமன்றத்தில், ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து ஆகியோர், கடந்த ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில்  நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே 2 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது.

இந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணை தொடங்கியது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதாடி வருகிறார். இந்த நிலையில், பொதுக்குழு விதிகளை பின்பற்றி   நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது குறித்த வாதங்களை முன்வைக்குமாறு ஓபிஎஸ் தரத்திற்கு நீதிபதி  அறிவுறுத்தியிருந்தார்.

இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில், ஜெயலலிதா நிரந்தர பொது செயலாளர் ஆக நீடிப்பார் என 2017 பொது குழுவில் முடிவு செய்யப்பட்டது. 2017 பொது குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்ந்தெடுக்க விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது என்றும், பொது செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை திருத்த முடியாது என்றும், பொதுச் செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment