#Breaking:”முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி”-இந்திய விமானப்படை!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளில் விரைந்து உதவிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில்,விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது.மேலும்,ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 14 பேரில்,முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

எனினும்,கேப்டன் வருண் சிங் மட்டும் 80% காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையில்,விபத்து நடந்த அன்று மாலையே,தமிழக முதல்வர் ஸ்டாலின் வெலிங்டன் ராணுவ பகுதிக்கு சென்று விபத்து நடந்த பகுதியில் மீட்புபணிகளை துரித்தப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும்,விபத்து குறித்து ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின்னர்,உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு கருப்பு துண்டு அணிந்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில்,குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின் மீட்பு பணிகளின்போது உதவிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.மேலும்,நீலகிரி மாவட்ட ஆட்சியர்,காட்டேரி பகுதி மக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக,இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“தமிழக முதல்வர் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வழங்கிய உடனடி மற்றும் நீடித்த உதவிக்கு இந்திய விமானப்படை (IAF) நன்றி தெரிவிக்கிறது.

துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்துக்குப் பிறகு மீட்பு மற்றும் மீட்பு நடவடிக்கையில் உதவிய காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு நன்றி”,என்று தெரிவித்துள்ளது.