போரூர் அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு (35), சாப்ட்வேட் இன்ஜினியர். இவரது மகள் ஹாசினி (7). இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி திடீரென காணாமல் போனார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் மெக்கானிக் இன்ஜினியர் தஷ்வந்த் (25) என்பவர் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தஷ்வந்த் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இதுதொடர்பாக நடந்து வந்த வழக்கில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து கோர்ட் உத்தரவிட்டது. மேலும், அவருக்கு ஜாமீன் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும் போது, ‘குழந்தைகள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மக்களை பாதுகாக்கத்தான் நீதித்துறை இருக்கிறது. அந்த நீதித்துறையில் இருக்கிற ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர். சட்டத்தின் மீதான நம்பிக்கை மக்களுக்கு போய் விட கூடாது. சட்டத்தை நம்பியே அனைவரும் உள்ளனர். இதனை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு உள்ளது.