இந்தியா மீது பழி சுமத்துவதற்கு பாகிஸ்தான் நடத்திய நாடகம் அம்பலத்துக்கு வந்ததால், போலி படங்களை காட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா. தலைவர் அறிவித்தார்.சமீபத்தில் ஐ.நா. பொதுச்சபையில், பாகிஸ்தானுக்கான நிரந்தர பிரதிநிதி மலீஹா லோதி காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். இந்தியப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட பெண் என்று ஒருவரது படத்தை தூக்கிப்பிடித்து காட்டினார்.
ஆனால் அவர் காட்டிய புகைப்படம் போலியானது. அந்த படத்தில் இடம் பெற்றிருந்தவர், காஷ்மீர் பெண் அல்ல. அவர், காசா நகரில் இஸ்ரேல் தாக்குதலில் படுகாயம் அடைந்த 17 வயது பெண், ராவ்யா அபு ஜோமா ஆவார். அந்தப் படத்தை 2014-ம் ஆண்டு, அமெரிக்க புகைப்பட கலைஞர் ஹெய்தி லெவின் எடுத்து வெளியிட்டு, அது அந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகும் என்பதை இந்தியா அம்பலப்படுத்தியது.
இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபை தலைவர் மைரோஸ்லாவ் லஜ்காக்கிடம், பாகிஸ்தான் பிரதிநிதி போலியான படத்தை காட்டி பேசிய விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், “நிச்சயம் இது குறித்து விவாதிப்பேன். அதேநேரத்தில் இது ராஜீய ரீதியிலான விவகாரம்” என்று கூறினார்