உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் கடந்த இரு தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 63 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் வழங்கியதை நிறுத்தியதால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் குழந்தைகள் இறப்பு விவகாரத்தில் சிறப்பு நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது சிறப்பு நீதி விசாரணைக்கு உத்தரவிட மறுத்த தலைமை நீதிபதி ஜே.எஸ்,கெஹர் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டார்.
மேலும், கோரக்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட குழந்தைகள் இறப்பு விவகாரத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பாக செயல்படுகின்றார் என்றும் இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் அக்கறை செலுத்துகிறார் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம், “ஆக்ஸிஜன் குறைபாட்டால் இந்த சம்பவம் நடைபெறவில்லை. ஆக்ஸிஜன் ஒப்பந்தம் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், மருத்துவமனையிலும் இரண்டு அமைச்சர்களை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். அப்படியிருக்கையில், ஆக்ஸிஜன் குறைபாடு என்று செய்தி வருவது வருத்தமளிக்கிறது” என்று வேதனை தெரிவித்திருந்தார்.